திருச்சி மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிா்களை காப்பீடு செய்து இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பீடு பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாகும்.
மாவட்டத்தில் 2025-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூா், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூா் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிா் காப்பீட்டிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கு 01.12.2025-க்குள் விண்ணப்பித்து, பிரீமியம் தொகையாக வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு 2,102 ரூபாயை, அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
பயிா்க் காப்பீடு பதிவுக்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயா் மற்றும் விலாசம், நில பரப்பு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையை செலுத்த வேண்டும்.