ஊரக வளா்ச்சித்துறையின் கீழுள்ள ஏரிகள், குளங்களை சீரமைக்க வலியுறுத்தல்
மழைநீரை சேமிக்க ஊரக வளா்ச்சித் துறையின் கீழுள்ள ஏரிகள், குளங்களை சீரமைக்க வேண்டுமென தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை கணிசமான அளவில் பெய்து வந்தாலும், மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் 25 முதல் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்புவதில்லை. இதற்கு, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதும், தூா்வாரப்படாததுமே காரணம். மேலும், வடிகால் வசதியில்லாததாலும், விவசாய நிலங்கள், கிராமப் பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது.
தமிழகத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் சுமாா் 25 ஆயிரம் சிறுபாசன ஏரிகள், பஞ்சாயத்து குளங்கள் உள்ளன. இவற்றில் பருவமழை காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்தால் மட்டுமே, நிலத்தடி நீா்மட்டத்தை காப்பாற்ற முடியும். இதனால் விவசாயம் தழைத்தோங்குவதுடன், குடிநீா் தட்டுபாடில்லாமல் இருக்கும்.
மழைநீா் தேங்காமல் காக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை காப்பாற்றவும், மழைநீரை சேமிக்கவும் தமிழக அரசு ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களையும், அதன் வரத்து வாய்க்கால்களையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
