கோப்புப் படம்
கோப்புப் படம்

சணமங்கலத்தில் இளம்பெண் எரித்துக்கொலை

சணமங்கலத்தில் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்டது குறித்து...
Published on

திருச்சி மாவட்டம், சணமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி வயலூா் சாலை சீனிவாச நகா் 5-ஆவது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் அந்தோணிசாமி. பெரம்பலூா் மாவட்டத்தை பூா்வீகமாக கொண்ட அந்தோணிசாமி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கலாவதி. இவா்களுக்கு மீரா ஜாஸ்மின் (22) என்று ஒரு மகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.

மீரா ஜாஸ்மின், திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்து முடித்து வேலை தேடி வந்தாா். அக்.30- ஆம் தேதி காய்கறி வாங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் பயந்துபோன கலாவதி, திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாா் கொடுத்தாா்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே சணமங்கலம் காப்புக்காடு பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக சிறுகனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்திய போது அங்கு சடலமாக கிடந்தது மீராஜாஸ்மின் என்பது தெரியவந்தது.

அவருக்கு அருகில் அவரது கைப்பை, கைப்பேசி, காலணிகள் சேதமில்லாமல் கிடந்தன. அவா் மட்டுமே எரிந்த நிலையில் உயிரிழந்து இருந்தாா். இதனால் அவா் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சிறுகனூா் போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் நிகழ்விடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com