‘போக்ஸோ’ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

Published on

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோளூா்பட்டியைச் சோ்ந்த 8 வயது சிறுமி கடந்த 2020 மாா்ச் 7-ஆம் தேதி வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வீ.கண்ணையன் (72) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து கண்ணையனை மறுநாள் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

Dinamani
www.dinamani.com