அரியலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான மற்றும் நெருக்கடியான 193 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுவதுடன், துணை ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு க்கு நிறுத்தப்படுவார் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி.
திருமானூர் அடுத்த கீழகாவட்டாங்குறிச்சியிலுள்ள பதற்றமான வாக்குச் சாவடியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் தெரிவித்தது:
சிதம்பரம் (தனி)மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தலில், அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 587 வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான மற்றும் நெருக்கடியான 193 வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரீமிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு விவரங்களை ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து, சட்ட ஒழுங்கு மற்றும் விதிமீறல்களை ஒழுங்குபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக 193 வாக்குச்சாவடிகளுக்கு வெப்கேமராக்கள் கையாளக்கூடிய 74 தேர்தல் பணி அலுவலர்கள் புதியதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முதல்முறையாக தபால் ஓட்டு வசதி செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட தேசிய தகவலியல் மைய அலுவலர் ஜான்பிரிட்டோ செய்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார். ஆய்வின்போது, அரியலூர் கோட்டாட்சியர் நா. சத்தியநாராயணன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.