ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி
By DIN | Published On : 12th February 2019 09:18 AM | Last Updated : 12th February 2019 09:18 AM | அ+அ அ- |

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் எந்தக் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாவட்டத் தலைவர்கள், தொண்டர்களின் கருத்தைக் கேட்டறிந்து வருகிறேன். அவர்கள் மக்களின் மனநிலையைப் பிரதிபலித்து வருகின்றனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவரவர்களுக்கு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அறிவிப்பு வெளிவரும். அதுபோலத்தான், எங்கள் கட்சியும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியது போன்று, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள், நெசவாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள் இயற்கையால் வஞ்சிக்கப்படுகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். அதிமுகவின் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டம் பொதுவாக தனது கடமையைச் செய்ய வேண்டும் என்றார் வாசன்.
பேட்டியின் போது, மாவட்டத் தலைவர்கள் அரியலூர் குமார், திருச்சி தெற்கு டி.குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.