ஆண்டிமடம் அருகே இளைஞர் தற்கொலை: காதலிக்கு சிகிச்சை
By DIN | Published On : 05th May 2019 03:28 AM | Last Updated : 05th May 2019 03:28 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழந்தார். காதலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டிமடம் அருகிலுள்ள கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பிரபு (எ) தெய்வசிகாமணி(19). ஜயங்கொண்டத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவருக்கும், அதே கல்லூரியில் படித்து வந்த உடையார்பாளையம் முனையதரையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கயல்விழி(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த கயல்விழி குடும்பத்தினர், கடந்த பிப்ரவரி மாதம் கயல்விழியை சென்னையில் உள்ள அவரது உறவினருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தால், கயல்விழிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதையடுத்து, தனது கணவருடன் வாழப் பிடிக்கவில்லையென தெய்வசிகாமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தெய்வசிகாமணி வெள்ளிக்கிழமை சென்னை சென்று, கயல்வழியை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளார்.
கயல்விழியைக் காணவில்லை என அவரது கணவர் கூறியதையடுத்து, கயல்விழியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை கூவாத்தூர் பாலத்தின் அருகே தெய்வசிகாமணி, கயல்விழி இருவரையும் பார்த்த சிலர், அவர்களை உறவினர்கள் தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து, மருந்தில்லா ஊசியை இருவரும் போட்டுக் கொண்டனர். இதில், கயல்விழி மயக்கமடையவே இறந்து விட்டார் என நினைத்த தெய்வசிகாமணி, அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸார் அப் பகுதிக்குச் சென்று தெய்வசிகாமணி சடலத்தை கைப்பற்றனர்.
கயல்விழிக்கு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.