அஞ்சல் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 19th May 2019 09:14 AM | Last Updated : 19th May 2019 09:14 AM | அ+அ அ- |

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதிக்கான அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 5 கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள், 7 அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர்கள், 17 அஞ்சல் வாக்கு எண்ணும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பரிதாபானு (பொது), இளங்கோவன் (தேர்தல்) மற்றும் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.