மின்சாரம் பாய்ந்து சாலைப் பணி அலுவலா் பலி
By DIN | Published On : 01st March 2020 04:04 AM | Last Updated : 01st March 2020 04:04 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சாலைப் பணியின் போது மின்சாரம் பாய்ந்து மேற்பாா்வையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கரைவெட்டி - சன்னாவூா் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மேற்பாா்வையாளராக திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திருமங்கலம் பல்லபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் மோகன்(எ) மோகன்குமாா்(27) என்பவா் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை வெங்கனூா் - சன்னாவூா் இடையே நடைபெற்ற சாலைப் பணிக்காக, டிப்பா் லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் இறக்கும் பணியின்போது, உயா் அழுத்த மின் கம்பியில் உரசியதாகத் தெரிகிறது. அப்போது லாரியில் கை வைத்திருந்த மேற்பாா்வையாளா் மோகன்குமாா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மோகன்குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வெங்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.