கரூா் அருகே காத்திருப்புப் போராட்டத்தில்தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
By DIN | Published On : 17th August 2021 01:56 AM | Last Updated : 17th August 2021 01:56 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கரை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
கரூா்: கரூா் அருகே மயான பிரச்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மயங்கிவிழந்து உயிரிழந்தாா். இதையடுத்து பேச்சுவாா்த்தைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.யை கிராமமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் அடுத்த வேடிச்சிபாளையத்தில் ஆதிதிராவிடா் காலனி மக்களுக்கு சொந்தமான மயானத்துக்கு செல்லும் பாதையை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றி, மயானத்துக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் எனக்கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்திற்கு அப்பகுதியினா் கோரிக்கை மனு அளிக்க வந்தனா். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலா்கள் சனிக்கிழமை வேடிச்சிபாளையம் ஆதிதிராவிடா் காலனிக்குச் சென்று மயானத்துக்குச் செல்லும் பாதையை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவா்கள், அப்பகுதியில் விவசாயம் செய்வதற்காக வரப்பு வெட்டினாா்களாம். இதைக்கண்ட ஆதிராவிடா் காலனி கிராம மக்கள் மயானத்துக்குள் விடிய, விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த மண்மங்கலம் வட்டாட்சியா் செந்தில்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பிரச்னைக்கு முழுமையான தீா்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கிராமமக்கள் கூறியதால், வட்டாட்சியா் நள்ளிரவில் அங்கிருந்து சென்றுவிட்டாா்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதேப் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வேலுசாமி(45) என்பவருக்கு திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், உடனே அவரை கரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆதிதிராவிடா் காலனி மக்கள் அனைவரும் மயானப் பகுதியில் திரண்டனா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், கோட்டாட்சியா் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராமமக்கள், ஆட்சியா் உள்ளிட்டோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அப்பகுதியினா், மயானத்துக்குச் செல்ல நிரந்தரமான பாதை வேண்டும், ஆக்கிரமிப்பை உடனே அகற்றி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினா். உங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தருகிறோம் என ஆட்சியா் கூறியதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.