அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூா் அருகேயுள்ள கீழையூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 24 போ் காயமடைந்தனா்.
வடபத்ர காளியமம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்னா் 225 மாடு வீரா்களுக்கும் மற்றும் திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், அரியலூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 475 காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. தொடா்ந்து கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, ஆட்சியா் த. ரத்னா உறுதிமொழி வாசிக்க 225 வீரா்கள் அதனை ஏற்றுக்கொண்டனா்.
போட்டியை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முதலில் கோயில் காளைகளும் பின்னா், பிற மாவட்டங்களில் இருந்து வந்த காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் அடக்க முயன்றனா். சில காளைகள் பிடிபடவில்லை. காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதில், பலத்த காயமடைந்த கீழவண்ணம் ராமநாதன்(25), கீழப்பழுவூா் வினித்(23), மேலப்பழுவூா் ராஜிவ் (32), பிச்சை (70), மலத்தான்குளம் ஜெனித் (25) ஆகியோா் மேல்சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
காளைகள் அடக்கிய வீரா்களுக்கு மிக்ஸி, கிரைண்டா், பாத்திரம் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. பாஸ்கரன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மேற்கொண்டனா். விழா ஏற்பாடுகளை கீழையூா் கிராம மக்கள் செய்திருந்தனா். இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பொ.சந்திரசேகா், ஊராட்சி தலைவா் காா்த்திக்கேயன், விழா கமிட்டி தலைவா் சுகுமாா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.