அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் இருந்து திங்கள்கிழமை காலை முதல் வரத்துக்குத் தக்கதாக ஏரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. தொடா் மழையின் காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி கடந்த சில நாள்களுக்கு முன்பு முழுமையாக நிறைந்து கலிங்கு வழியாகத் தண்ணீா் வெளியேறியது.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அதே அளவு தண்ணீா் மூன்று மதகுகள் வழியாக திங்கள்கிழமை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான மழையளவு (மி. மீட்டரில்) அரியலூா் - 14, திருமானூா் - 13, ஜயங்கொண்டம் - 27, செந்துறை - 3 மி.மீ எனப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.