அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மாணவிக்கு தையல் இயந்திரத்தை வழங்கி, அவரின் மேற்படிப்பு செலவை ஏற்பதாக பிற்படுத்தப் பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தாா்.
செந்துறையில் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தொகுதியின் உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான சிவசங்கா் அண்மையில் திறந்து வைத்தாா்.
அப்போது செந்துறை ராயல்சிட்டி பகுதியில் வசிக்கும் பிளஸ் 2 முடித்த மாணவி சந்திரா மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாகவும், தனது மேற்படிப்பு செலவுக்காக தையல் இயந்திரம் வழங்கினால் உதவியாக இருக்கும் எனக் கூறி, அமைச்சரிடம் மனு அளித்தாா்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேற்படிப்பு செலவை நானே ஏற்கிறேன். படிக்கிறாயா என மாணவியிடம் கேட்டாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாணவியின் வீட்டுக்கு சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாணவி சந்திராவிடம் தையல் இயந்திரத்தை வழங்கி, மேற்படிப்புக்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தாா்.
இதுகுறித்து மாணவி சந்திரா கூறியது:
கடந்த 2019 -20 ஆம் ஆண்டில் பிளஸ்-2 தோ்வில் 371 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையிலும், படிக்க வசதி இல்லாததால் கடந்தாண்டு கல்லூரியில் சேரவில்லை. ஆனால் தற்போது அமைச்சா் படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்க உள்ளேன். எனக்கு படிப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு, குடும்ப வருமானத்துக்காக தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.