

அரியலூா் மாவட்டம், திருமானூரைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஏலாக்குறிச்சிக்கு தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனா்.
நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 2 ஆம் தேதி சாம்பல் புதன்கிழமையன்று தொடங்கியது. தவக்காலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை நேரங்களில் சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள் மற்றும் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெற்று வருகிறது.
தவக்காலத்தை முன்னிட்டு, திருமானூா் அருளானந்தா் ஆலயத்தில் இருந்து ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் வரை தவக்கால சிலுவை பயணம் (திருப்பயணம்)ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. திருமானூா் புனித அருளானந்தா் ஆலயத்தில் தொடங்கிய தவக்கால திருப்பயணத்தை பங்குத் தந்தை லியோ ஆனந்த் தொடக்கி வைத்தாா். ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, விழுப்பணங்குறிச்சி, சுள்ளங்குடி, பெரியமறை வழியாக ஊா்வலமாகச் சென்றனா். சிலுவைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ஆயா் சிலுவையை சுமந்து சென்றனா்.
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலம் வந்தடைந்த இவா்களை பல கிராம மக்கள் புடைசூழ வரவேற்றனா். அங்கு ஆலயத்தின் பங்குத் தந்தை சுவக்கின் தலைமையில் உதவி பங்கு தந்தைகள் இன்பென்ட்ராஜ், குடந்தை மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி ஆகியோா் முன்னிலையில் சிறப்பு தவக்கால சிலுவை பாதை திருப்பலியை நடத்தினா்.
திருப்பலியில் 16-ஆம் நிலை சிலுவை பாதையுடன் திருப்பலி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்வேறு கிராம கிறிஸ்தவ ஆலயங்களின் பங்குத் தந்தையா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.