அரியலூர்: சுதந்திர நாள் விழாவில் ரூ.72.59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 15th August 2022 11:38 AM | Last Updated : 15th August 2022 11:38 AM | அ+அ அ- |

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய புகைப்பட கலைஞர் பாரதிதாசனுக்கு நற்சான்றிதழை வழங்குகிறார் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூர்: சுதந்திர நாளையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சமாதான புறாக்களை பறக்கவிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, காவல்துறை, பள்ளி தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும் கைத்தறி ஆடைகளை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.72 லட்சத்து 59 ஆயிரத்து 858 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: புதுகையில் 101 பயனாளிகளுக்கு ரூ.27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பொதுவிருந்து: சுதந்திர நாளை முன்னிட்டு அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி கோயிலில் பொது விருந்து நடைபெற்றது. விருந்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில்களில் சுதந்திர நாளை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...