பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி 15.09.2022 அன்று வியாழக்கிழமையும், தந்தை பெரியாா் நாளையொட்டி 17.09.2022 அன்று சனிக்கிழமையும் அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.
இப்போட்டியானது மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கப்படும். மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வா், பள்ளி தலைமை ஆசிரியா் ஆகியோரிடம் அனுமதி பெற்று வரவேண்டும்.