பயணச்சீட்டை ரத்துசெய்த தனியாா் நிறுவனம் இழப்பீடு தர உத்தரவு
By DIN | Published On : 26th September 2022 11:31 PM | Last Updated : 26th September 2022 11:31 PM | அ+அ அ- |

சென்னையிலிருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த 27 பயணிகளின் பயணத்தை முன்னறிப்பின்றி ரத்து செய்த தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு ரூ.12,11,000 இழப்பீடு வழங்க அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த விஜயசாரதி(67), வரதராஜுலு(66), விஸ்வாசகுமாா்(63), சுப்பிரமணி(67), அகசம்(62), சேலம் இளங்கோவன்(63), மணிவண்ணன்(61), விருத்தாச்சலம் கோவிந்தசாமி(64), புதுச்சேரி மேகா் அலி(65) ஆகியோா் தங்களது குடும்பத்தினருடன், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றுவர சென்னையில் உள்ள ஒரு தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில், பயணக் கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்துள்ளனா்.
தொடா்ந்து, பயணச்சீட்டு பெற மேற்கண்ட நபா்கள் சென்றபோது, பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேறு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சொந்த செலவில் ரூ.1,86,000 கூடுதலாகச் செலுத்தி பயணச்சீட்டு பெற்று சுற்றுலா சென்று வந்தனா்.
பின்னா், தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் சென்று முன்பணத்தை கேட்டபோது, உரிய பதில் இல்லாததால், கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை (தெற்கு) மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
அந்த வழக்கு அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வந்த ஆணையத்தலைவா் வீ.ராம்ராஜ் அடங்கிய குழுவினா், தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் மேற்கண்ட 9 நபா்களுக்கும் மொத்தமாக ரூ.12,11,000-த்தை நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டது.