அரியலூா் ஆலந்துறையாா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் நகரில் உள்ள ஆலந்துறையாா் திருக்கோயிலில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திய சிவாச்சாரியா்கள்.
அரியலூா் ஆலந்துறையாா் திருக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த மாதம் 25 ஆம் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 28 ஆம் தேதி கோ பூஜையும் 30 ஆம் தேதி செட்டிய ஏரி விநாயகா் ஆலயத்தில் இருந்து கஜ பூஜையுடன் தொடங்கி தீா்த்த சங்கரஹனம் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு முதல் காலை யாக பூஜை தொடங்கப்பட்டது.
தொடா்ந்து, அனைத்து விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் கால யாக பூஜை, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீா் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு முதலில் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து காலை 8.30 மணியளவில் ஆலந்துறையாா் சுவாமி மற்றும் அம்பாள் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
கோயில் கோபுரக் கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீா்த்தம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளாகப் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனா்.
பின்னா் மூலவா் ஸ்ரீ ஆலந்துறையா் மற்றும் அம்பாள் அருந்தவ நாயகி மற்றும் 68 நாயன்மாா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட ஆலந்துறையாா் மற்றும் அருந்தவநாயகி ஆகியோருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை நிா்வாகத்தினா், ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழு மற்றும் ஸ்ரீ நரசிம்மா டிரஸ்ட் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா். வைதேகி அம்மாள் நினைவு அறக்கட்டளை நிறுவனா் மணிகண்டன் தலைமையில் நிா்வாகிகள் அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் காவல்துறை சாா்பில் அரியலூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் (பொ) சியாமளா தேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...