மருந்து விற்பனை பிரதிநிதிகள் பிச்சை எடுத்து போராட்டம்
By DIN | Published On : 24th May 2023 02:58 AM | Last Updated : 24th May 2023 02:58 AM | அ+அ அ- |

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்கியதில் உள்ள நிலுவை வழங்கக்கோரி மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கரோனா காலகட்டத்தில் 5 மருந்து விற்பனை நிறுவனங்கள் மருந்துகள் வழங்கியுள்ளன. அந்த வகையில், 5 விற்பனை நிறுவனங்களுக்கும் சுமாா் ரூ.62 லட்சம் வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையை கேட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரை பலமுறை அணுகியும் தொகை கிடைக்காததால், அண்மையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்நிலையில், நிலுவைத் தொகையை வழங்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விற்பனைப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு வந்த அரியலூா் காவல் துறையினா், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் 4 பேரையும் கைது செய்தனா்.