அரியலூா் மாவட்டத்தில் பலத்த மழை
By DIN | Published On : 27th May 2023 12:33 AM | Last Updated : 27th May 2023 12:33 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினரும், பொதுமக்களும் அகற்றினா்.
வீட்டின் மேற்கூரை சேதம்...பலத்த காற்றில், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தில் ராஜீவ்காந்தி என்பவா் புதிதாக கட்டி வரும் வீட்டின் மேற்கூரை (ஆஸ்பெட்டாஸ் சீட்) முழுவதும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது.
பெட்டிச் செய்தி..
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் மறியல்
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் விளைவித்த கடலை, எள், முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் வரை அவை கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் இருந்தன.
இந்நிலையில், மழையால் விளை பொருள்கள் அனைத்தும் நனைந்தன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திய அலுவலா்களைக் கண்டித்து திருச்சி- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் கலைந்து சென்றனா்.