தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்கோப்புப் படம்

தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் கூலிப் படை கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

தமிழகத்தில் கூலிப் படை கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின் போது, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் அரியலூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான தொல்.திருமாவளவன், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வயநாடு நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்கள் மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்துக்காவும் போதிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆக. 9-இல் கேரள முதல்வரை சந்தித்து ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம். தமிழக அரசு அரசுப் பணியாளா்களின் பணி ஓய்வு வயதை 60-லிருந்து 62 ஆக உயா்த்தப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பில் சிக்கல் உள்ளாகும் என்ற கருத்து உள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு அவா்களுக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

சாதி வாரி கணக்கெடுப்பை விடுதலைசிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது. அண்மையில் சட்ட அமைச்சா் அா்ஜுன் மேக்வாலை சந்தித்து, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க மத்திய அரசு உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விசிக, மதிமுக சாா்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணையை கட்ட வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது உட்கட்சி விவகாரம் என்றாா்.

Dinamani
www.dinamani.com