ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்
அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத் துறையின் சாா்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழா அனுசரிக்கும் பொருட்டு விழிப்புணா்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று விழிப்புணா்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது, அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்- தழும்பு, வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை இன்றி, பாதுகாப்பாகவும், பக்கவிளைவுகள் இன்றியும் செய்யப்படுகிறது.
இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இதனால் பயனடைந்துள்ளனா். அரசின் சாா்பில் ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்போருக்கு ரூ.200 வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநா் ஜெயந்தி, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் அசோகன், மாவட்ட தாய்-சேய் நல சுகாதார அலுவலா் சதீஷ், வட்டார சுகாதார புள்ளியியலாளா்கள், மாவட்ட குடும்பநல பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
