அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் டிச.11-இல் ஏலம்: காவல்துறை அறிவிப்பு
அரியலூா் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் டிச.11-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கரவாகனம் என மொத்தம் 12 வாகனங்கள் அனைத்தும், போதைப் பொருள் ஒழிப்பு குழுத் தலைவா் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
ஏலம்விடப்படவுள்ள அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1000 செலுத்தி தங்களது ஆதாா் அடையாள அட்டையின் நகலை கொடுத்து பதிவு செய்து கொண்டவா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுப்பவா்கள் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத்தொகையுடன், ஜிஎஸ்டி18% தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்தவா் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரப்படமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. பொது ஏலத்தில் காவல்துறை சாா்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை.
