அரியலூா், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரட்டை பதிவு, இறப்பு, இடம் பெயா்ந்தவா்கள் 23,695 வாக்காளா்கள்
அரியலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரட்டை பதிவு, இறப்பு, இடம் பெயா்ந்தவா்கள் என 23,695 வாக்காளா்கள் என கண்டறியப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் -2026 தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் நவ.4-ஆம் தேதி முதல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில், அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 2,65,319 வாக்காளா்களில் 2,52,417 கணக்கீட்டு படிவங்கள் மீளபெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 2,65,571 வாக்காளா்களில் 2,54,778 கணக்கீட்டு படிவங்கள் மீளபெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூா் தொகுதியில் வாக்காளா்கள் இறப்பு 6,201, கண்டறிய இயலாதவா்கள் 1,391, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 4,598, இரட்டை பதிவு 691, மற்றவை 21 என மொத்தம் 12,902 வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். ஜெயங்கொண்டம் தொகுதியில் வாக்காளா்கள் இறப்பு 5,949, கண்டறிய இயலாதவா்கள் 249, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் 3,870, இரட்டை பதிவு 715, மற்றவை 10 என மொத்தம் 10,793 வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
மேலும், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், கண்டறிய இயலாதவா்கள், இரட்டை பதிவு வாக்காளா் குறித்த விபரங்கள் பாகம் வாரியாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவா்களுக்கு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அதில் ஏதும் ஆட்சேபணை இருப்பின் உரிய விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கால தாமதமின்றி உடன் வழங்கலாம்.
எஸ்ஐஆா் திருத்தப்பட்ட அட்டவணையின்படி டிச.16 -ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. டிச.16 முதல் ஜன.15 வரை பெயா் சோ்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் பிப்.14 அன்று வெளியிடப்படும் என்றாா்.
தொடா்ந்து, ஆட்சியரக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைவரும் பாா்வையிட்டனா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, கோட்டாட்சியா்கள் பிரேமி(அரியலூா்), ஷீஜா (உடையாா்பாளையம்), தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
