கைது
கைது

சாலையில் வீலிங் சாகசங்கள் 3 இளைஞா்கள் கைது

மீன்சுருட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசங்கள் செய்த 3 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசங்கள் செய்த 3 இளைஞா்களைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மீன்சுருட்டி அருகே கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் தலைக்கவசங்கள் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மற்றும் வீலிங் செய்தும் சில இளைஞா்கள் விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனா். இந்த விடியோ பதிவைக் கொண்டு, மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில்,

அவா்கள் ஜெயங்கொண்டம், வாரிங்காவல் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜ சோழன் மகன் சக்திவேல் (22), கீழக்குடியிருப்பு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் பிரவீன்குமாா் (23), ஆண்டிமடம், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ரோஸ் அமிா்தம் மகன் பிரவீன் ஜோஸ் (24) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், அவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com