அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாலை மறியல்

அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாலை மறியல்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அஞ்சல் நிலையம் அருகே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் 180 போ் கைது செய்யப்பட்டனா்.

தொழிலாளா்களுக்கு எதிரான 4 தொழிலாளா் சட்டத் திருத்த தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆபத்தான அனுமின் சக்தி உற்பத்தியில் தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்ட மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும். மின் விநியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025- ஐ திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் காந்தி பெயரை எடுத்து விட்டு, ஏழைகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அண்ணா சிலையிலிருந்து ஊா்வலமாகச் சென்று, தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அரியலூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 180 பேரைக் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலுக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் டி. தண்டபாணி, தொமுக மாவட்டச் செயலா் ஆா். மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி. துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலா் என். செளந்தர்ராஜன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலா் எஸ். ராமசுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

Dinamani
www.dinamani.com