குடிபோதை தகராறை தட்டிக்கேட்ட தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயன்ற மகன் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தட்டிக்கேட்ட தந்தையின் மீது பெட்ரோலை ஊற்றிக் கொலை செய்ய முயன்ற மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் தம்புசாமி மகன் பிச்சைப்பிள்ளை (68). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித் தனியே ஒரே ஊரில் வசித்து வருகின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்த நிலையில் பிச்சைப்பிள்ளை மட்டும் தனியே வசித்து வருகிறாா்.
இந்நிலையில், பிச்சைப்பிள்ளையின் இரண்டாவது மகனான மணிகண்டன் மதுப்பிரியா் என்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு தந்தையிடமும், அருகே வசிப்பவா்களிடமும் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அண்டைவீட்டுக்காரா்களிடம் மணிகண்டன் (43) தகராறு செய்தாா்.
இதனை பிச்சைப்பிள்ளை தட்டிக் கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பெட்ரோல் வாங்கி வந்து, பீடி குடித்துக் கொண்டிருந்த பிச்சைப்பிள்ளை மீது ஊற்றிக் கொலை செய்ய முயன்றாா். இதனால், சாலையில் கத்திக்கொண்டே உருண்டுசென்ற பிச்சைப்பிள்ளையை அவரது மகள் மற்றும் அக்கம்பக்கத்தினா் தீயை அணைத்து மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா்.
இதுகுறித்து பிச்சைப்பிள்ளை மகள் உஷாதேவி (37) அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த ஆண்டிமடம் காவல் துறையினா் மணிகண்டனை சனிக்கிழமை கைது செய்தனா்.
