அரியலூரில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு மீண்டும் அமல்
அரியலூா் மாவட்டத்தில் நுழையும் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை விடப்பட்டிருந்த நாள்களில் கனரக வாகனங்களின் இயக்கத்துக்கான நேரக் கட்டுப்பாட்டில் தளா்வு அறிவிக்கப்பட்டு, அந்த வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிந்ததால் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
எனவே அரியலூா் மாவட்டத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கான நேரக் கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தினமும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரையிலும் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
