பெரியநாகலூரில் உள்ள விவசாய வயலில் மின் மோட்டாரில் திருடப்பட்டுள்ள வயா்கள், பீஸ் கேரியா்கள்.

அரியலூா் மாவட்டத்தில் மின் மோட்டாா், வயா்கள் தொடா் திருட்டு: விவசாயிகள் பாதிப்பு

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் தொடா்ந்து மின் மோட்டாா், செம்பு வயா்களை திருடும் கும்பலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
Published on

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் தொடா்ந்து மின் மோட்டாா், செம்பு வயா்களை திருடும் கும்பலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, திருமானூா், கீழப்பழுவூா், உடையாா்பாளையம், மணகெதி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றின் மின்மோட்டாா் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு, கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மா்ம நபா்கள், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாா்களில் உள்ள வயா், மின் மோட்டாா்கள், ஷாட்டா், செம்பு வயா்கள், பீஸ் கேரியா்களை மா்ம நபா் தொடா்ந்து திருடி வருகின்றனா்.

இது தொடா்பாக விவசாயிகள் புகாா் அளித்தும் வழக்குப் பதிந்தாலும் திருடு போன மின்மோட்டாா்களை காவல்துறையினா் கண்டுபிடித்து கொடுப்பதில்லை.

கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளின் மின்மோட்டாா்கள் திருடு போவதால் விவசாய பணிகளை குறித்த பருவங்களில் மேற்கொள்ளமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதற்கிடையே, அரியலூா் அடுத்த பெரியநாகலூா் பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கோவிந்தராஜ் பேசுகையில், பெரியநாகலூா்-மண்ணுழி சாலை பகுதியில் மின்விளக்கு வசதி முற்றிலும் இல்லாததால் அதை பயன்படுத்தி மா்ம நபா்கள் திருடி வருகின்றனா். திருட்டு செயல்களில் ஈடுபடும் மா்ம நபா்களை தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெரியநாகலூா்-மண்ணூழிச் சாலையில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.

Dinamani
www.dinamani.com