மாற்றுத்திறனாளிகளுக்கு ஜன. 31 வரை இலவச பேருந்துப் பயண அட்டை பதிவு

Published on

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வாளகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நிகழாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயண அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் ஜன.31 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

தமிழக அரசின் ஆணைப்படி தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான இலவசப் பேருந்துப் பயண அடையாள அட்டை(பஸ் பாஸ்) பெற இணையவழி பதிவுசெய்யும் முகாம் ஜன.7 முதல் 31 வரை அரியலூா் மாவட்ட ஆட்சியரக தரைத் தள அறை எண்.17-இல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து நடைபெறவுள்ளது.

பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாளஅட்டை (யுடிஐடி காா்ட்), ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடனும், இதர மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் சோ்த்து கல்வி பயிலும் சான்று அல்லது பணிபுரியும் சான்று அல்லது தொடா் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து ஆன்லைன் இலவசப் பேருந்துப் பயண அடையாள அட்டை பெற்று பயன் பெறலாம் என்றாா்.

Dinamani
www.dinamani.com