கரூரில் டிப்பர் லாரியைத் திருடிய தஞ்சை இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி சின்னநடுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்(43) தனது டிப்பர் லாரியை புன்னம்சேரன் பள்ளி அருகே கடந்த மாதம் 23 ஆம் தேதி விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் சிறிதுநேரத்தில் திரும்பிவந்துபார்த்தபோது, லாரியைக் காணவில்லை. சரவணன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் டிப்பர் லாரியைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இதனிடையே போலீஸார் விசாரணையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூரைச் சேர்ந்த கணேசன் மகன் கிருஷ்ணராஜ் (24) லாரியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணராஜை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாரியைப் பறிமுதல் செய்தனர்.