புஞ்சைப்புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடியில் கதவணை, அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.10.30 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கான நில உறுதித்தன்மை ஆய்வு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது.
புஞ்சைபுகழூரில் காவிரியாற்றின் குறுக்கே சுமார் ரூ.490 கோடியில் 1,140 மீ. நீளத்திற்கும், 3 மீ. உயரத்திற்கும் இந்தக் கதவணை அமைக்கப்படவுள்ளது. இதில் 12 மீ. நீளமும், 2.5 மீ உயரமும் கொண்ட மதகுதகள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
இந்த கதவணை காரணமாக, 2 மாவட்டங்களிலும் சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைவதுடன் கரூர் நகராட்சி, நாமக்கல் மாவட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களும் மேம்பாடு அடையும்.
அரவக்குறிச்சி வட்டம், கூடலூர் மேல்பாகம் கிராமத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே 120 மீ. நீளமும், 1.50 மீ. உயரம் கொண்ட சுமார் ரூ.10.30கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதன் மூலம் கூடலூர், நஞ்சதலையூர், புஞ்சதலையூர், கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர்மட்டம் உயரும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) ஷாஜன், செயற்பொறியாளர் மூர்த்திராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.என்.சிவசுப்ரமணியன்,கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.