குளங்கள், ஏரிகளை தூர்வார ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கீடு
By DIN | Published On : 03rd July 2019 09:13 AM | Last Updated : 03rd July 2019 09:13 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டத்தில் உள்ள 33 குளங்கள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிகழாண்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள 33 குளங்கள், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார ரூ.6, 87, 50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமராவதி வடிநில கோட்டத்துக்குட்பட்ட பள்ளபாளையம், கோயம்பள்ளி சோமூர், திருமாநிலையூர், மாயனூர் மணவாசி, சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, மோஞ்சனூர் ஆகிய 7 வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக மொத்தம் ரூ.1.87 கோடியும், காவிரி வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பாப்புலர் முதலியார், கட்டளை, புது கட்டளை, மகாதானபுரம், படுகை மற்றும் சித்தலவாய், அரியாறு வடிநில கோட்டத்துக்குள்பட்ட கடவூர் தென்னிலை, மாவத்தூர், பன்னப்பட்டி, கிருஷ்ணராயபுரம் தாதம்பட்டி, பாப்பாக்காப்பட்டி, குளித்தலை மேலவெளியூர், கழுகூர் குளம் ஆகிய நீர்வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 33 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6,87,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.