விளையாட்டு விடுதிகளில் சேர சென்னையில் 9-இல் தேர்வு முகாம்
By DIN | Published On : 03rd July 2019 09:14 AM | Last Updated : 03rd July 2019 09:14 AM | அ+அ அ- |

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர சென்னையில் வரும் 9-ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் மூலமாக விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாநில அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு முகாம் சென்னையில் பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தடகளம் மற்றும் கால் பந்து, இறகுப் பந்து, டேக்வாண்டோ, கையுந்து பந்து, கைப்பந்து, ஸ்குவாஷ் ஆகிய போட்டிகள் நேரு விளையாட்டரங்கிலும், சென்னை அசோக் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் மற்றும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் ஹாக்கி விளையாட்டுக்கும் தேர்வுமுகாம் நடைபெறும்.
விடுதியில் தங்கி 7-ஆம் வகுப்பில் சேர 1.1.2016 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராகவும், 8-ஆம் வகுப்பில் சேர 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராகவும், 9-ஆம் வகுப்பில் சேர 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராகவும், பிளஸ்-1 வகுப்பில் சேர 1.1.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 165 செ.மீ, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 170 செ.மீ, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 185 செ.மீ, மாணவிகள் எனில், 5 செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை விலக்கு அளிக்கப்படும். மேலும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். ஜூலை 8-ஆம் தேதி விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கடைசி நாள்.