வேட்புமனு பரிசீலனை: கரூர் மக்களவைத் தொகுதியில் 43 மனுக்கள் ஏற்பு; 11 நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 07:37 AM | Last Updated : 28th March 2019 07:37 AM | அ+அ அ- |

கரூர் மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 43 மனுக்கள் ஏற்கப்பட்டது. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதன்கிழமை தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த் குமார் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் நடத்தினார்.
அகில இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவரின் வேட்புமனு, சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்து, அவரின் ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்சத்தில் மீதமுள்ள மனுவும், அதே போல வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தவர்களின் மனுவும் என மொத்தம் 9 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 54 வேட்பு மனுக்களில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 43 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்வின்போது, துணை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வசுரபி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மல்லிகா, வேட்புமனுக்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர்கள் அருள், ராம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...