கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் பதவியேற்பு
கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் சங்கத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேங்க் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தேர்தலுக்கு கடந்த 9ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் தலைவராக பேங்க் நடராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணைத்தலைவர் சி.சுப்ரமணியன் மற்றும் 18 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேங்க் இரா.நடராஜனுக்கு சான்றிதழை கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல் வழங்கினார்.
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு பண்டகசாலைத்தலைவர் வை.நெடுஞ்செழியன், அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ், தானேஷ், விவேகானந்தன், பொரணிகணேசன், முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி, தொழில் அதிபர்கள் பிரேம்டெக்ஸ் வீரப்பன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.