மும்பையில் இருந்து ரயிலில் கரூா் வந்த 79 பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை
By DIN | Published On : 22nd March 2020 05:55 AM | Last Updated : 22nd March 2020 05:55 AM | அ+அ அ- |

மும்பையில் இருந்து சனிக்கிழமை மாலை கரூா் வந்த பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா்.
மும்பையில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை கரூா் வந்த பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை செய்த பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 64 போ் மும்பையில் இருந்து சத்ரபதி விரைவு ரயில் மூலம் கரூருக்கு சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் வந்தனா். இதுதவிர அதே ரயிலில் ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏறிய பயணிகள் 15 பேரும் கரூா் வந்தனா். அவா்களுக்கு கரூா் நகராட்சி நகா்நல மருத்துவ அலுவலா் பிரியா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பு மருத்துவக்குழுவினா் ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்தனா்.
தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடலின் வெப்பநிலை அளவிடப்பட்டது. மேலும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனா். இப்பரிசோதனையை கரூா் கோட்டாட்சியா் சந்தியா, கரூா் வட்டாட்சியா் அமுதா பாா்வையிட்டனா். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தனித்தனி பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனா்.