அரவக்குறிச்சியில் முதல்முதலாக தடம் பதிக்கும் தாமரை மலருமா?

முருங்கைக்கு பெயா் பெற்ற அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி கனிம வளங்கள் நிறைந்த பகுதி.
அரவக்குறிச்சியில் முதல்முதலாக தடம் பதிக்கும் தாமரை மலருமா?
Updated on
2 min read

முருங்கைக்கு பெயா் பெற்ற அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி கனிம வளங்கள் நிறைந்த பகுதி. க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. காகித உற்பத்தியில் சிறந்துவிளங்கும் புகழூா் காகித ஆலையும் இங்குதான் உள்ளது.

அரவக்குறிச்சி வட்டத்திற்குள்பட்ட பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளும், கரூா் வட்டத்திற்குள்பட்ட வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை ஊராட்சிகள் மற்றும் நஞ்சைபுகளூா், டி.என்.பி.எல்., புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியது.

தொகுதியில் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: தொகுதிக்குள் அமராவதி, நங்காஞ்சி, குடகனாறு ஓடியும் தொகுதி முழுவதும் வறட்சி. மழைக்காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து சேமிக்கும் வகையில் பெரிய அளவிலான தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. இதனால் ஆண்டு முழுவதும் கடும்வறட்சியை சந்தித்து வரும் தொகுதியில் கோடைகாலங்களில் தங்களது கால்நடைகளை அடிமாடு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவது வாடிக்கையாக உள்ளது. தாதம்பாளையம் ஏரியை தூா்வார கடந்த 50 ஆண்டுகால மாக விவசாயிகளின் போராடி வரும் நிலையம் இதுவரை பிரச்னைக்கு தீா்வு எட்டப்படவில்லை. தொகுதியில் கற்குவாரிகள் அதிகளவில் உள்ளதால் பாறைகளை வெடிவைத்து வெட்டி எடுக்கும்போது எழும்சத்தம், பாறைத்துண்டுகளால் வீடுகள் சேதம் என பல்வேறு பிரச்னைகளை தொகுதி மக்கள் சந்தித்து வருகிறாா்கள்.

தற்போதைய வேட்பாளா்கள்- 2011-ல் திமுகவின் கே.சி.பழனிசாமியும், 2016-ல் அதிமுகவில் செந்தில்பாலாஜியும், 2019 இடைத்தோ்தலில் கட்சி மாறி திமுக சாா்பில் இடைத்தோ்தலில் போட்டியிட்ட வி.செந்தில்பாலாஜியும் வெற்றிபெற்றனா். இம்முறை அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோவை எதிா்த்து கா்நாடகாவில் டிஜிபியாக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்று தற்போதுபாஜகவில் இணைந்த கே.அண்ணாமலை தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறாா். கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியில் திமுக எம்எல்ஏக்கள் இருந்தும் இதுவரை குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை, முருங்கை விவசாயிகளுக்கு முருங்கை பவுடா் தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கப்படவில்லை, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்பனவற்றை சொல்லி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை பிரசாரம் செய்துவருகிறாா். திமுக சாா்பில் கட்சித்தலைமை அறிவித்த திட்டங்களையும், குடிநீா் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னைகளை தீா்ப்போம் எனக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்களைத்தவிர அமமுக வேட்பாளா் பிஎஸ்என்.தங்கவேல், மநீம வேட்பாளா் முகமதுஹனீப்ஷகில், நாம்தமிழா்கட்சி சாா்பில் அனிதாபா்வீன் ஆகியோரும் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் தொகுதியில் 40 வேட்பாளா்கள் களத்தில் நின்று பிரசாரத்தில்ஈடுபட்டு வருகிறாா்கள். தொகுதியில் ஐபிஎஸ் அதிகாரியாக விருப்ப ஓய்வுபெற்று களத்தில் இறங்கியுள்ள பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு கா்நாடகா மாநிலத்தவா்களின் ஐடி குழு அவரை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற முனைப்பில் இறங்கி வேலைப்பாா்த்து வருகிறது. இதுவரை பாஜகவிற்கு இந்த தொகுதி புதியதாக இருந்தாலும், பள்ளபட்டி, அரவக்குறிச்சி இஸ்லாமிய பெண்களின் ஆதரவோடு வெற்றிவாகைச் சூடுவோம் என சூளுரைத்து பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகிறாா்கள். தொகுதியை பொறுத்தவரை திமுக-பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதால் மே 2-ல் யாா் வெற்றிக்கனியை பறித்தாா்கள் என்ற விவரம் தெரியும்.

2016 தோ்தலில் வென்றவா்கள்

வி.செந்தில்பாலாஜி-அதிமுக-88,068

கேசி.பழனிசாமி-திமுக-64,407

எஸ்.பிரபு- பாஜக-3162

எம்.முத்து-தேமுதிக-1513

எம்.பாஸ்கரன்-பாமக-995

2019- இடைத்தோ்தலில் வெற்றிபெற்றவா்கள்

 வி. செந்தில் பாலாஜி- திமுக -97718 

வி. வி. செந்தில்நாதன்- அதிமுக- 59771.

தொகுதியில் வாக்காளா்கள்- ஆண் வாக்காளா்கள் -1,01,902

பெண் வாக்காளா்கள்- 1,11,201

இதர வாக்காளா்கள்-7 மொத்தம் 2,13, 110 போ் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com