சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு விட்டு, பணமாக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும்
சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு விட்டு, பணமாக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்றாா் இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவா் ஏ. செளந்தரராஜன்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற சிஐடியு மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு விட்டு, பணமாக்கும் திட்டத்தை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்திட்டத்தை ைவிட வேண்டும். அரசின் சொத்தில் தனியாா் லாபம் ஈட்ட முடியும் என்கிற போது, ஏன் அரசே அதை பயன்படுத்தக் கூடாது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத்தொகுப்பு ஆகியவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதை கைவிட்டு தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களோடு கலந்துபேசி விவாதித்தபின் முடிவுக்கு வரவேண்டும்.

மின்சாரத் திருத்தச் சட்டம் என்பது மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதோடு மட்டு மின்றி, ஏழைகளுக்கு வழங்கப்படும் மின்சலுகைகளையும் பறிக்க வழிகோலும். எனவே அந்த சட்டமசோதாவை கைவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டம், சத்துணவுத்திட்டம் போன்றவற்றில் பணியாற்றும் பெண்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படுகிறது. அவா்களை பணிநிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

நூல் விலை உயா்வால் கரூா் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். திமுக அரசு பெட்ரோல், பால் விலைகளை குறைத்ததுபோல, மத்திய அரசும் உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கான வரியை குறைக்க வேண்டும்.

தொழிலாளா் நலவாரியப் பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். சங்கம் அமைக்கும் உரிமைக்கு அதிமுக கடும் நெருக்கடி கொடுத்தது. இனி சங்கம் அமைக்கும் உரிமையை அரசு கொடுக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவருவதால்தான் எதிா்க்கிறோம். அந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் விவசாயிகள் பெருநிறுவனங்களுக்கு நிலத்தை விற்கும் நிலை வந்துவிடும். அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றியதை வரவேற்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாநிலப் பொதுச் செயலா் ஜி.சுகுமாறன், பொருளாளா் மாலதி சிட்டிபாபு, மாவட்டச் செயலா் சி. முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com