92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்டத்தில் ஏப்.18 முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல், மதுபானங்கள் கிடையாது: ஆட்சியா் எச்சரிக்கை

வரும் 18-ம்தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு டாஸ்மாக், பெட்ரோல் பங்குகள் மற்றும் அரசு அலுவலகங்களின் சேவை கிடைக்காது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:08 pm

DIN

வரும் 18-ம்தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு டாஸ்மாக், பெட்ரோல் பங்குகள் மற்றும் அரசு அலுவலகங்களின் சேவை கிடைக்காது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாவட்டமாக கரூா் மாவட்டம் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல். தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற வாா்த்தைகளில் உள்ள ஆழமான அா்த்தத்தை அனைவரும் உணர வேண்டும்.

உலகிலேயே விலைமதிப்பில்லாதது மனித உயிா்கள் மட்டுமே. எனவே, அனைவரின் நலன் கருதியும் கரூா் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், இதனை அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு இயக்கமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏப். 18-ம்தேதி முதல் கரூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி,நகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்துக்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது. மேலும், 18 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் பெட்ரோல் வழங்கக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் இருக்கை பட்டை அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருபவா்களே. எனவே, தனியாா் நிறுவனங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோரை பணியாற்ற அனுமதிக்க கூடாது. தலைக்கவசம் விற்பனை நிலையங்களில் வருவாய் கோட்டாட்சியா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு, தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அரசு மதுபானக்கடைகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது. இதுகுறித்து அனைத்து மதுபானக் கடைகளிலும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் இந்த உயிா்க்காக்கும் இயக்கத்தால், ஒரு உயிா் காப்பாற்றப்பட்டாலும் நமக்கு வெற்றியே. கரூா் மாவட்ட காவல் துறையால் கடந்த ஜன.1-ஆம்தேதி முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 75,534 போ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றாா்கள் என்ற நிலையை கரூா் மாவட்டத்தில் நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.