உலகிலேயே விலைமதிப்பில்லாதது மனித உயிா்கள் மட்டுமே. எனவே, அனைவரின் நலன் கருதியும் கரூா் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், இதனை அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு இயக்கமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏப். 18-ம்தேதி முதல் கரூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி,நகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்துக்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது. மேலும், 18 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் பெட்ரோல் வழங்கக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் இருக்கை பட்டை அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.