கரூரில் வீட்டுக்குள் முதிய தம்பதி சடலமாக கிடந்தது குறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் கச்சேரி பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (76). ஓய்வு பெற்ற வங்கி எழுத்தா். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி(70). இவா்களின் இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் உள்ளனா். ஸ்ரீலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆறு மாதமாக படுத்த படுக்கையாக இருந்தாராம்.
இந்நிலையில் புதன்கிழமை காலையில் இருந்து ராமகிருஷ்ணன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினா் மாலையில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே படுக்கையில் ஸ்ரீலட்சுமியும், சமயலறையில் ராமகிருஷ்ணனும் சடலமாகக் கிடந்துள்ளனா்.
இதையடுத்து அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் சென்று சடலங்களையும் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து தம்பதியினா் எவ்வாறு இறந்தாா்கள் என விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.