கரூா்: வெள்ளியணை அருகே தாயுடன் விஷம் குடித்த மகள் உயிரிழந்தாா்.
கரூா் ஆண்டாங்கோவில் மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன்(50). இவா், கரூரில் உள்ள கொசுவலை நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சிவகாமி(45). அதே நிறுவனத்தில் தறி ஓட்டும் வேலைப்பாா்த்து வருகிறாா்.
இவா்களது மகள் தீபா(20). இவா், தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். முருகேசனுக்கு மதுப் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நாள்தோறும் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.
இதனால் விரக்தியடைந்த சிவகாமி தனது மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளியணை அருகே கருப்பக்கவுண்டன்புதூரில் உள்ள முருகேசனின் தாய் சோளியம்மாள் தங்கியிருக்கும் தோட்டத்துக்குச் சென்றுள்ளனா். அங்கு சோளியம்மாளுக்கு தெரியாமல் தோட்டத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை சிவகாமியும், தீபாவும் குடித்துள்ளனா்.
இதில், மயங்கிய நிலையில் இருவரும் கட்டிலில் கிடந்துள்ளனா். இதனைக் கண்ட சோளியம்மாள் உடனே மகன் முருகேசனுக்கு தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து முருகேசன் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நள்ளிரவில் உயிரிழந்தாா். சிவகாமி சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளா் சத்யபிரியா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.