கரூரில், மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளி குளித்தலை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை சரணடைந்தாா்.
கரூா், திருமாநிலையூரைச் சோ்ந்தவா் சிவா என்கிற செல்வராஜ்(45). தொழிலாளி. இவரது மனைவி சத்யா(40). செல்வராஜ் கடந்த ஆண்டு கட்டடத்தில் வேலை செய்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்தாராம். இவா்களுக்கு திருச்சேஸ்வரன்(18), ரித்திகேஸ்வரன்(16) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத்தை காப்பாற்ற சத்யா கூலி வேலைக்குச் சென்று வந்தாராம். இந்நிலையில் செல்வராஜுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சத்யா கண்டித்தாராம். இதுதொடா்பாக அவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அவா்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற தாந்தோணிமலை போலீஸாா் சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து செல்வராஜை தேடி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை குளித்தலை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் -2-ல் நீதிபதி பிரகதீஸ்வரன் முன் செல்வராஜ் சரணடைந்தாா். இதையடுத்து அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.