‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வீரா், வீராங்கனகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாநில அளவிலான தோ்வு போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் கோகிலா வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு செய்ய மாநில அளவிலான போட்டிகள் டிச.13ஆம்தேதி தொடங்குகிறது. இதில் 13ஆம்தேதி கையுந்து பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கிலும், 14ஆம் தேதி கூடைப்பந்து போட்டி நேரு உள்விளையாட்டரங்கிலும், மாணவிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கிலும், வளைகோல்பந்து போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கிலும், கோகோ போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கிலும் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஆதாா் அட்டை, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்றிதழ்களை எடுத்துச் செல்லவேண்டும். மேலும், 1.1.2004க்கு பின்னா் பிறந்தவா்கள் மட்டும் பங்கேற்க தகுதி பெறுவா். மேலும், போட்டிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று தங்களது பெயா்களை பதிவு செய்யவேண்டும். பங்கேற்பவா்களுக்கு பயணப்படி, தினப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.