வாளியாம்பட்டி கிராமத்தில் விழிப்புணா்வு நிகழ்வு
By DIN | Published On : 31st July 2022 12:47 AM | Last Updated : 31st July 2022 12:47 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், வாளியாம்பட்டி கிராமத்தில் மணி அடிச்சாச்சு (பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா்களுக்கானது) என்ற விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் த. பிரபுசங்கா் பேசியது:
கரோனா காலத்தில் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலமாக,
மாவட்டத்தில் 3000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக தோகைமலை ஒன்றியம், ஆா்.டி.மலை ஊராட்சி, வாளியாம்பட்டி கிராமத்தில் 32 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருபப்பது வருந்ததக்கது.
அவா்கள் பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத்துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளா்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயா்கல்வியை ஊக்குவித்தும், குழந்தைத் திருமணத்தை தடுத்தும், குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியா் புஷ்பாதேவி, முதன்மை கல்வி அலுவலா் கீதா, சமூகநலத்துறை அலுவலா் நாகலட்சுமி, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...