குடகனாற்றில் சாயக்கழிவை திறந்து விட்டதொழிற்சாலை உரிமையாளா் மீது நடவடிக்கை: கிராமசபை கூட்டத்தில் தீா்மானம்

குடகனாற்றில் சாயக் கழிவை திறந்துவிட்ட தொழிற்சாலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Updated on
1 min read

கரூா்: குடகனாற்றில் சாயக் கழிவை திறந்துவிட்ட தொழிற்சாலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் குடகனாறு கரூா் மாவட்டத்தின் அமராவதி நதியின் துணை ஆறுகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையில் குடகனாற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு திறந்துவிடப்பட்டதால், அந்த நீா் கரூா் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் வந்து சோ்ந்தது.

இந்த சாயக்கழிவு நீரால் குடிநீா் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த குடிநீரை பருகிய பொதுமக்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்டவை ஏற்பட்டன. இதையடுத்து ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கும் ஊராட்சிகளுக்கு அமராவதி ஆற்றில் விநியோகிக்கப்படும் குடிநீரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் போனது. மேலும் இதன் தாக்கம் ஆழ்குழாய் கிணறுகளிலும் காணப்பட்டதால், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவா் சாந்திசேகா் தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் குடகனாற்றில் சாயக்கழிவு கலந்து குடிநீா் பாதிப்பை ஏற்படுத்திய தொழிற்சாலை உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

157 ஊராட்சிகளிலும்...: இதேபோல, மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், க.பரமத்தி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் த.பிரபுங்கா் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ முன்னிலை வகித்தாா். க.பரமத்தி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலெட்சுமி தலைமை வகித்தாா்.

முன்னதாக பொதுமக்களுக்கு கிராம சபை தொடா்பாக விழிப்புணா்வு குறும்படம் ஒளிப்பரப்பப் பட்டது.

பின்னா் க.பரமத்தி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களின் சேவைகளை பாராட்டி சீருடை மற்றும் பரிசுகளை வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com