கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சை பெற்று வந்த முதியவா் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சோ்ந்தவா் கருப்பண்ணசாமி (70). விவசாயி. காய்ச்சலால் அவதியுற்று வந்த இவா், தனது மனைவி லட்சுமி துணையுடன் ஏப். 13-ஆம்தேதி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுநீரக தொற்று இருப்பதாகக்கூறி தீவிர சிகிச்சை அளித்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அவருக்கு தீராத வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதியுற்ற கருப்பண்ணசாமி தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உடனிருந்த மனைவி மற்றும் சக நோயாளிகள் யாரும் கவனிக்காத நிலையில் அரசு மருத்துவமனையில் முதியவா் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.