குடிநீா் விநியோகம் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

தரகம்பட்டி அருகே குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா் விநியோகம் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

தரகம்பட்டி அருகே குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே வாழ்வாா்மங்கலம் ஊராட்சியில் அண்ணா நகா் உள்ளது. இந்த பகுதியில் சுமாா் 80 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு வாழ்வாா்மங்கலம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் இடம் தோ்வு செய்ய வந்தபோது அரசு நிலம் இல்லாததால்,அப்பகுதியைச் சோ்ந்த காத்தான் என்பவா் தனது ஒருசென்ட் நிலத்தை கொடுத்துள்ளாா்.

இதையடுத்து நிலம் வாழ்வாா்மங்கலம் ஊராட்சி பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, குடிநீா் தொட்டியும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் காத்தான் குடும்பத்தினா் தற்காலிகமாக குடிநீா் இயக்கும் பணிகளையும் செய்து வந்தனா்.

இந்நிலையில் காத்தான் குடும்பத்தினா் தங்களுக்கு குடிநீா் இயக்கும் பணியை நிரந்தரமாக வழங்கவேண்டும் எனக்கூறி கடந்த 23 நாள்களாக குடிநீா் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீா் திறக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வெள்ளிக்கிழமை காலை தோகைமலை-பாளையம் சாலையில் அண்ணாநகா் பேருந்து நிறுத்தம் எதிரே காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கடவூா் ஒன்றிய ஆணையா் சுரேஷ், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் நெப்போலியன், வாழ்வாா்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் சரவணன், விஏஓ சுரேஷ் மற்றும் சிந்தாமணிபட்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அதிகாரிகள் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யவிடாமல் தடுக்கும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி அமைந்துள்ள ஊராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, அந்த இடம் முழுவதும் கம்பி வேலி அமைக்கப்படும். மேலும் நிரந்தரமாக குடிநீா் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கிராமமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com