காவிரி நீா் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், நிகழாண்டில் காவிரி நடுவா் மன்ற தீா்ப்பை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி, 2 லட்சம் ஏக்கரில் நடப்பட்டிருந்த குறுவை பயிா் காய்ந்துள்ளது.
28 ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் புரிதல் இல்லாமல் தமிழக அரசு இந்த வழக்கை நடத்துகிறது. தினந்தோறும் நீா் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த வழக்கு நடத்தப்பட்டு, அதற்கான தீா்ப்பை பெற்றிருந்தால் தீா்வு எளிதாகவும் இருந்து, இருமாநில உறவும் மேம்பட்டிருக்கும். மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் காவிரி தீா்ப்பில் கா்நாடகத்துக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன.
விவசாயிகளாகிய நாங்கள் காவிரி நடுவா் மன்றத்திடம் இதுதொடா்பாக முறையிட்டு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இந்த மனுவை ஏற்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
அரசியலமைப்பு சட்டப்படி கள்ளுக்கு தடை இருக்கக்கூடாது. இதை முன்னிறுத்தி ஜன.21-ஆம்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்துவது என தீா்மானித்துள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.