வெள்ளத்தால் குடிநீரேற்று நிலையம் சேதம் குடிநீரின்றி கரூா் மக்கள் அவதி

காவிரி ஆற்றின் வெள்ளத்தால் குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Published on

காவிரி ஆற்றின் வெள்ளத்தில் குடிநீரேற்று நிலைய மோட்டாா்கள், கிணறுகள் அடித்துச் செல்லப்பட்டதால் கரூா் மாவட்டத்தில் குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளுக்கும் மாயனூா் காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்தும், வாங்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில்

இருந்தும் ஆற்றில் குடிநீா் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு, மாநகா் முழுவதும் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சிக்கும், கீழமாயனூா் காவிரி ஆற்றின் பகுதியிலும் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல திருக்காம்புலியூா், சேங்கல், சித்தலவாய், முத்துரெங்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு திருக்காம்புலியூா்அருகே காவிரி ஆற்றில் குடிநீா் உறிஞ்சும் கிணறுகள் அமைத்தும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.60 லட்சம் கன அடி வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த குடிநீா் உறிஞ்சும் கிணறுகள் சிதிலமடைந்து, கிணற்றுக்குள் அமைத்திருந்த

மோட்டாா்கள், குழாய்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீா் ஏற்ற முடியாமல் போனதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஆற்றில் தண்ணீா் வற்றி வருவதால் விரைந்து குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com